செய்திகள்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கோத்தகிரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் பல்வேறு துறை அதிகாரிகள், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜான் நேற்று காலை கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்றார். அங்கு உரிய சமூக இடைவெளி கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், கடைகளுக்கு முன் கிருமிநாசினி மருந்து மற்றும் கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா, வியாபாரிகள் உரிய வகையில் முகக் கவசங்கள் அணிந்து உள்ளார்களா என ஆய்வு செய்தார்.
மேலும் ஒவ்வொரு கடைகளாக சென்று கொரோனா நோய் தொற்று குறித்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுமட்டுமின்றி முகக்கவசங்களை அணியாமல் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.