திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும்- கனிமொழி
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மெயின் பஜாரில் தி.மு.க. சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாதவது:-
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தகரத்தினை தங்கம் என்று பரிசாக தந்தது போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை வெற்றி நடைபோடக் கூடிய தமிழ்நாடு என்று ஏமாற்றி மக்களிடம் விற்று விடாலம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டில் 23 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் அது நிறை வேற்றப்படும்
இடஒதுக்கீடு, சமூகநீதி, தமிழ் உணர்வு, தமிழ் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், மாணவர்களின் கல்வி போன்ற அடிப்படை விசயங்களை கூட அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றனர். அவர்களுக்கு துணையாக இருப்பது தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடக்கிறது. எந்தவித அடிப்படை வசதிகளும் தமிழகத்திற்கு அரசு செய்து கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.