செய்திகள்
கோப்பு படம்.

மதுரையில் ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.50 லட்சம் ஆடைகள் எரிந்து சேதம்

Published On 2021-05-11 09:43 GMT   |   Update On 2021-05-11 09:43 GMT
மதுரை மாநகரில் உள்ள ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமானது.

மதுரை:

மதுரை தெற்குமாசி வீதியை சேர்ந்தவர் ரகுராம் சவுத்ரி. இவர் மகால் 2-வது தெருவில் எம்.எம். கலெக்சன்ஸ் என்கிற ஜவுளிக்கடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ஜவுளிக்கடை மூடப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு 11 30 மணியளவில் கடையில் இருந்து திடீரென குபுகுபுவென கரும் புகை வந்து உள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன், சுப்பிரமணியன் (தல்லாகுளம்) மற்றும் உதவி மாவட்ட அலுவலர் பாண்டி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஜவுளி கடையில் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்து இருந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் மற்றும் ரெடிமேட் ஆகியவை தீயில் கருகிச் சாம்பலாகின.

மதுரை ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News