செய்திகள்
நகை பறிப்பு

மதுரையில் 2 பெண்களிடம் நகைகள் பறிப்பு

Published On 2021-09-19 10:41 GMT   |   Update On 2021-09-19 10:41 GMT
மதுரையில் 2 பெண்களிடம் நகைகள் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

கரிமேடு முடக்குசாலை இந்திராணி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சாலமன் ராஜா மனைவி செல்வமணி (வயது 35).

சம்பவத்தன்று மதியம் இவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். பின்சீட்டில் இருந்தவர் கீழே இறங்கிச் சென்று குடிக்க தண்ணீர் கேட்டார்.

இதையடுத்து செல்வ மணி வீட்டுக்குள் செல்ல முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் செல்வமணி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றான்.

இதுகுறித்து கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (80). இவர் நேற்று தண்ணீர் தொட்டி அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. போலீசார் நகைப்பறிப்பு குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மோகன்குமார் மனைவி இந்திரா (52).

சம்பவத்தன்று காலை இவர் அரசு பஸ்சில் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றார். பனகல் ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே பஸ் வரும்போது இந்திரா வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் பறித்து சென்றார். அதில் 6 பவுன் நகை இருந்தது.

இதுகுறித்து இந்திரா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News