ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் உள்பட வாலிபர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய போதும் கஞ்சா விற்பனை தொடர்ந்து வருகிறது.
கடமலைக்குண்டு அருகே உள்ள கொம்புக்காரபுலியூர் சோதனைச்சாவடியில் வனத்துறை ரேஞ்சர் குமரேசன், வனக்காப்பாளர்கள் மாயாண்டி, காமராஜ், வீராச்சாமி, வேட்டைத்தடுப்பு பிரிவு செல்வம், உத்தரேசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்த முயன்றனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது.
வனத்துறையினர் ஆட்டோவை விரட்டி சென்று பிடித்து சோதனையிட்டதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கஞ்சா கடத்திய கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த சுரேஷ்(22), வாசகமூர்த்தி(22) ஆகியோரை பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்கள் 2 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.