செய்திகள்
மீனவ கிராமத்தில் ஆய்வுக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி

தரங்கம்பாடி அருகே ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Published On 2021-07-28 19:14 GMT   |   Update On 2021-07-28 19:14 GMT
தரங்கம்பாடி அருகே மீன்வளத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி ஆகிய மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 14 மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். அதன் பேரில் மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், சீர்காழி தாலுகா பழையாறு முதல் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களிலும் சுழற்சி முறையில் இரவு, பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று 9-வது நாளாக தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள படகுகள், வலைகள், என்ஜின்கள் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர அமலாக்க பிரிவினர் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். தகவல் அறிந்து கடற்கரை பகுதியில் திரண்ட புதுப்பேட்டை மீனவர்கள், அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தங்கள் அனுமதியின்றியும், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அனுமதி இன்றியும் தங்களது படகு மற்றும் வலைகளை ஆய்வு செய்யக்கூடாது என அதிகாரிகளிடம், மீனவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார், புதுப்பேட்டைக்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், அனுமதியின்றி ஆய்வு செய்வதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இன்று(அதாவது நேற்று) மாலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அதுவரையில் மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் ஆய்வு செய்யக்கூடாது என்று கூறி அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தினர்.

மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து அதிகாரிகள் தங்களது ஆய்வை தொடர முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனால் தரங்கம்பாடி கடற்கரை கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
Tags:    

Similar News