செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்

Published On 2020-02-15 06:19 GMT   |   Update On 2020-02-15 06:19 GMT
டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர, அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடைபெற்ற ஊழல் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குரூப்-4, குரூப்-2ஏ மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

இந்த மோசடியை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேர்வாணையம் தனது தேர்வு முறையில் இன்றியமையாத மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து செயல்படுத்தி வருகிறது.



கடந்த 7.2.2020 அன்று ஆதார் கட்டாயம் உள்ளிட்ட 6 முக்கியமான புதிய மாற்றங்களை முதற்கட்டமாக அறிவித்து இருந்தது.

அதன் தொடர்ச்சியாக 14.2.2020 அன்றும் தேர்வு முறைகளில் செய்யப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து தேர்வாணையத் தலைவர் தலைமையில் தேர்வாணையக் குழுமம் கூடி விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தொகுதி-4, தொகுதி-2ஏ போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்து வருகிறது.

இனி வருங்காலங்களில் இந்த தேர்வுகள் இருநிலைகளைக் கொண்டதாக அதாவது முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்.

தேர்வு எழுத வரும் தேர்வர்களின் மெய்த்தன்மை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளைத் தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும், தேர்வர்கள் இனி, 9 மணிக்கே தேர்வுக்கூடங்களுக்கு வருகை புரிதல் வேண்டும்.

தேர்வு நேரம் சரியாக 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். 10 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு நேரத்திற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். காலை-மாலை இரு வேளைகளிலும் தேர்வு இருந்தால் மாலை நடக்க வேண்டிய தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

இனி வரும் கொள்குறி வகைத்தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். எந்தவொரு வினாவிற்கும் விடை அளிக்க இயலவில்லை, விடை தெரியவில்லை எனில் அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும் ‘இ’ என்ற வட்டத்தினை கருமையாக்குவதுடன் மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே ஏ.பி.சி.டி. மற்றும் இ விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை தனியே பதிவு செய்து அதற்கான உரிய கட்டங்களை நிரப்ப வேண்டும்.

தேர்விற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக தேர்வு நேரத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் இப்பணிக்காக மட்டும் வழங்கப்படும்.

எந்தவொரு கேள்விக்கும் மேற்கூறிய ஏ.பி.சி.டி. மற்றும் இ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.

தேர்வு முடிந்ததும் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனங்கான இயலாதவாறு தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகியவற்றை தேர்வர்களின் முன்னிலையிலேயே தனித்தனியே பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும். சீலிடப்பட்ட உறை மீது அறையிலிருக்கும் சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும்.

தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதிநவீன தொழில்நுட்ப ஜி.பி.எஸ். மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்த நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.

தேர்வாணையத்திற்கும், நேர்மையான முறையில் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்யவும், தகவல் பரிமாற்றத்தினை மேலும் எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணைய தளத்தில் ஒரு சிறப்பு தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும்.

தேர்வாணையம் அவ்வப்போது கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைப் பெறவும் தேர்வர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை தேர்வாணையத்துடன் பகிர்ந்து கொள்ளவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு தகவல் அளிக்கும் தேர்வர்களின் ரகசியத்தன்மை காக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News