செய்திகள்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பு
இணையவழி கருத்தரங்கு வருகிற 26 ந்தேதி முதல் ஆகஸ்டு 23 ந்தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.
உடுமலை:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி மற்றும் விபா நிறுவனம் இணைந்து ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான அறிவியல் திறனறி தேர்வான வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் தேர்வை நடத்தி வருகிறது.
அந்தவகையில் கொரோனோ பரவலை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டின் பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி கருத்தரங்கும், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ”ஆகார்கிராந்தி” என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1 ம் வகுப்பு முதல் கல்லூரி வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களும் இதில் பங்கேற்கலாம்.
இணையவழி கருத்தரங்கு வருகிற 26 ந்தேதி முதல் ஆகஸ்டு 23 ந்தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். மொத்தம் 5 கருத்தரங்குகள் நடைபெறும். இந்த போட்டிகள் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், 9 முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்படும்.
தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2 ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3 ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் மற்றும் ஆறுதல் பரிசாக 10 ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும். கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்க 24 ந்தேதிக்குள் http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.மேலும் தகவலுக்கு 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.