குடியுரிமை பிரச்சினையில் அதிமுக மாறி மாறி பேசுகிறது- கமல்ஹாசன் குற்றச்சாட்டு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டது கவலையளிக்கிறது. இது அநீதி. இந்த சர்வாதிகார நிலைமாற வேண்டும்.
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யால் சிறுபான்மையினருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் முதலில் அ.தி.மு.க. தான் எதிர்க்கும் என்று சட்ட சபையில் அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அ.தி.மு.க. மாறி மாறி பேசி வருகிறது. இந்த விஷயத்தில் அவர்களுடைய வியாபாரம் நடக்க வேண்டும். அவர்களது இலக்கு என்ன என்று தெரிய வில்லை.
தமிழகத்தை உயர்வான இடத்தில் வைப்பதற்கு எல்லாத் தமிழர்களின் பங்கீடு தேவை. முதலீடும் தேவை. உயர்ந்தவர்கள் செல்வத்தில் உதவி செய்து தமிழகத்தை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். எல்லாத் தமிழர்களுக்கும் உள்ள கடமை. அது ரஜினி காந்துக்கும் உண்டு என்று சொன்னேன்.
சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏ.வை ரத்து செய்திருக்கிறார்கள். நாடோடிகள் என்று நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் காலங்காலமாய் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்தவர்கள். அவர்களை திடீரென்று போகச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள் தமிழைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும். அவர்களும் இந்தியர்கள் தான்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை ஆய்வில் இருக்கிறது என்று அ. தி.மு.க. சொல்கிறது என்று தி.மு.க. சொல்கிறது. சட்டமன்றத்தில் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறோம். வாக்குவாதங்கள் நடை பெற்று இருக்கிறது என்று தெரியவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவை இவை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எந்தக் கட்சியுமே பேச அனுமதிக்க வில்லை என்று தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.