செய்திகள்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குமா? -ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நாங்கள் ரத்து செய்ததாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பாரா? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைத்து உள்ளன. பா.ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 123 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் இன்று தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். பிரசாரத்தில் அவர் பேசியபோது, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் அரசியல் ஸ்திரத்தன்மையை பாஜக உறுதி செய்திருப்பதாக கூறினார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நாங்கள் ரத்து செய்ததாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பாரா? என அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி என பிரதமர் மோடி கூறியதையும் சுட்டிக்காட்டினார்.