ஆன்மிகம்
இயேசு

மூன்றே நாட்களில் ஆலயத்தை எழுப்பிய அற்புதர்

Published On 2020-09-15 03:35 GMT   |   Update On 2020-09-15 03:35 GMT
இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.
முப்பதாவது வயதில் யோவான் தீர்க்கதரிசியிடம், யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குப் பெற்றார் இயேசு. அப்போது சீமோன், அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல் ஆகிய நான்கு பேர், இயேசுவை ‘மெசியா’ எனக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரிடம் சீடர்களானார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவர் போதிக்க ஆரம்பித்தார். போதனையைத் தொடங்கும்முன், தனது முதல் அற்புதத்தைத் தனது தாய் மரியாளின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்த்திக் காட்டினார்.

கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமண விருந்து நடைபெற்றது. இயேசுவின் தாய் அங்கு வந்திருந்தார். இயேசுவும் அவரது சீடர்களும்கூட அந்தத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். யூதத் திருமண விருந்தில், முதல் தரமான திராட்சை ரசம் பரிமாறப்படுவது விருந்தோம்பலின் முக்கிய அம்சமாக இருக்கும். விருந்தினர் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிட்டதால், திராட்சை ரசம் தீர்ந்துபோனது. இயேசுவின் தாய் அவரைப் பார்த்து, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை” என்றார்.

அதற்கு இயேசு, “தாயே, நீங்கள் எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் என் வேளை இன்னும் வரவில்லையே” என்று பதிலளித்தார். பரலோகத் தந்தையின் ஏற்பாட்டின்படி இயேசு தன்னை வெளிப்படுத்தும் காலம் அப்போது கனிந்திருக்கவில்லை. அதைத்தான் இயேசு அப்படிக் குறிப்பிட்டார். ஆனால் ஒரு மகனாகத் தன் தாயின் சொல்லை எப்படித் தட்டுவது?

தூய்மைச் சடங்கு செய்யத் தேவைப்படும் ஆறு தண்ணீர் ஜாடிகள், அந்தத் திருமண வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த தண்ணீரும்கூடத் தீர்ந்து போயிருந்தது. அந்த வீட்டின் பணியாளர்களை அழைத்த இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். அவர்களும் ஜாடிகளின் விளிம்புவரை நிரப்பினார்கள். தண்ணீர் திராட்சை ரசமாக மாறியிருந்தது. இதைக் கண்ட அவருடைய சீடர்கள், அவர் மீது மேலும் நம்பிக்கை வைத்தார்கள்.

இயேசு செய்த முதல் அற்புதம் (கானா ஊர் திருமணம்) பற்றி, கலிலேயா முழுவதும் செய்தி பரவ ஆரம்பித்தது.

யூதர்களின் முக்கியப் பண்டிகையான ‘பாஸ்கா’ சீக்கிரத்தில் வரவிருந்ததால், இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கு ஏக இறைவனுக்காக 46 ஆண்டுகள் செலவழித்து யூதர்கள் கட்டியிருந்த பிரமாண்டமான பேராலயம் இருந்தது. அந்த ஆலய வளாகத்துக்குள் நுழைந்தபோது, அங்கே கண்ட காட்சியைப் பார்த்துக் கொதித்துப் போனார் இயேசு.

யூத வியாபாரிகள் அந்த ஆலயத்தை, ஒரு பேரங்காடி போல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கணமும் தாமதிக்காமல் கயிறுகளைக் கொண்டு உடனடியாக ஒரு சாட்டையைத் தன் கைப்படப் பின்னினார். ஆலயத்தில் ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், மேசைகளைப் போட்டு நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் ஆலயத்தில் இருந்து சாட்டையால் அடித்து விரட்டினார். “இவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள். என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” (யோவான் 2: 16) என்றார்.

இயேசுவின் கோபத்தைக் கண்ட யூதர்கள் அவரை நெருங்கி, “இப்படியெல்லாம் செய்ய உமக்குக் கடவுள் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றால், அதை எங்களுக்கு நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் திரும்பவும் எழுப்புவேன்” (யோவான் 2:19) என்றார்.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‘நம்மிடம் வசமாகச் சிக்கினார்’ என்று நினைத்த யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க நாற்பத்தாறு ஆண்டுகள் பிடித்தன. நீரோ.. இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே?” என்றார்கள். ஆனால் இயேசு தனது உடலாகிய ஆலயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். மனித உடலும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்பதை உணர்த்தினார். தனது உடலைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.
Tags:    

Similar News