செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்- அரசு அறிவிப்பு

Published On 2021-04-03 20:58 GMT   |   Update On 2021-04-03 20:58 GMT
கொரோனா தொற்று தினமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றும், தமிழகத்தில் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது.

அதை கருத்தில்கொண்டு கடந்த 2-ந் தேதியன்று மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் மாநிலங்களில் விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய மந்திரிசபை செயலாளர் பேசும்போது, தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் சில நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.

அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

* தமிழகத்தில் கொரோனா தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாகவே உள்ளது. ஆனாலும் தற்போது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் நாளொன்றுக்கு 85 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் 100 சதவீதமும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

* நோய்த்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, 3-க்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அந்த பகுதி, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாகவே வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‘108’ அவசரகால ஊர்தியும் செயல்பாட்டில் உள்ளது.

* கொரோனா தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், ஊடகங்கள் உள்ளிட்டவை மூலம் அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகின்றன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதார, உள்ளாட்சி, போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் அபராதம் விதிக்கப்படுகிறது.

* கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை, வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.2.59 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

* தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2-ந் தேதி வரை 31 லட்சத்து 75 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3-ந் தேதி வரை 54 லட்சத்து 78 ஆயிரத்து 720 தடுப்பூசி டோஸ்கள் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டன.

* மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசின் மருத்துவமனைகளில் உள்ள வல்லுநர்களின் ஆலோசனைக்கு ஏற்ப நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

* பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது. பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்களை பெறவோ, தங்கள் குறைகளை தெரிவிக்கவோ ‘104’ தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

* தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

* பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், முறையாக கைகளை கழுவியும், அரசின் மற்ற அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தும் கொரோனா பரவலை தடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News