செய்திகள்
வகுப்பறையில் நடந்த கொடூரம்... மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தாளாளர்
பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் உதவி மைய இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி உள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பள்ளி தாளாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை, பள்ளி தாளாளர் வகுப்பறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் அக்டோபர் 5ம் தேதி நடந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து கடும் அதிர்ச்சியில் இருந்த அந்த மாணவி, படித்துக்கொண்டிருந்தபோது குழந்தைகள் உதவி மைய இலவச தொலைபேசி எண்ணை பார்த்துள்ளார். உடனடியாக அதில் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி உள்ளார். அங்கிருந்து, குழந்தைகள் நலக் குழு தலைவி அர்ச்சனா சவுத்ரிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினர், மாணவியை நேரில் சந்தித்து பேசினர். அதன்பின்னர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், போலீசார் பள்ளி தாளாளரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.