தொழில்நுட்பச் செய்திகள்
போலீஸ் என ஏமாற்றி ஆப்பிள், மெட்டாவிடமிருந்து பயனர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள்
ஹேக்கர்களிடம் பயனர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை ஆப்பிள், மெட்டா மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்கள் தந்துள்ளன.
ஆப்பிள், மெட்டா மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஹேக்கர்களிடம் ஏமாந்து தங்களது பயனர்கள் குறித்த தரவுகளை அளித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஹேக்கர்கள் தாங்கள் உயரதிகாரிகள் என கூறி தரவுகளை கேட்டதால் மேற்கூறிய 3 நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை தந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனங்கள், சாதாரண நேரத்தில் அதிகாரிகள் வாரண்ட் அல்லது கையெழுத்திடப்பட்ட கடிதத்தை கொண்டு தரவுகளை கேட்பார்கள். ஆனால் அவசரநிலை என்று வரும்போது நீதிமன்றத்தின் உத்தரவு தேவையில்லை. நேரடியாகவே டெக் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெறலாம். இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை பெற்றுக்கொண்டனர் என தெரிவித்துள்ளன.
இந்த குற்ற வேலைகளை செய்தது ஹேக்கிங் தெரிந்த இளைஞர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், அவசரநிலையில் இவ்வாறு தரவுகளை கேட்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றி வந்தாலும், இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்துவிடுவதாக கூறப்படுகிறது.