செய்திகள்
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2020-09-16 09:36 GMT   |   Update On 2020-09-16 09:36 GMT
தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சத்தில் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
திருவண்ணாமலை:

ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் ஆரணியை அடுத்த காட்டேரி கிராமத்தை சேர்ந்த ரகுவும் காதலித்து வந்து உள்ளனர். இது குறித்து ஜெயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4-ந் தேதி ஜெயலட்சுமி அவரது காதலன் ரகுவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் அவர்கள் சேத்துப்பட்டை அடுத்த ஆவணியாபுரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மன்னார்குடியில் உள்ள ரகுவின் நண்பர் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் ரகுவின் பெற்றோருக்கு பல்வேறு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் ஜெயலட்சுமியையும், ரகுவையும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சத்தில் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் இது குறித்து மனுவும் அளித்தனர்.
Tags:    

Similar News