செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் - நிர்மலா சீதாராமன் கணிப்பு

Published On 2020-10-27 22:18 GMT   |   Update On 2020-10-27 22:18 GMT
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்யத்தை ஒட்டி இருக்கும். அடுத்த நிதியாண்டில் இருந்து பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி:

இந்திய எரிசக்தி கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல், மிக உறுதியான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

ஏனென்றால், வாழ்வாதாரத்தை விட உயிருக்குத்தான் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

இந்த பொது முடக்கம், கொரோனாவை எதிர்கொள்ள தயாராவதற்கு கால அவகாசமும் அளித்தது.

ஆனால், பொது முடக்கம் இருந்தாலும், தற்போது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க மக்களை செலவிட வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். பண்டிகை காலம் வேறு வருவதால், பொருளாதாரம் மேலும் உந்தப்படும்.

எனவே, மூன்றாவது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), நான்காவது (அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை) காலாண்டுகளில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

முதலாவது காலாண்டில் (கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை) பொருளாதார வளர்ச்சி விகிதம் 23.9 சதவீதம் சரிவடைந்தது.

எனவே, ஒட்டுமொத்தமாக பார்த்தால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், பூஜ்யத்தை ஒட்டியோ அல்லது எதிர்மறையாகவோ (மைனஸ்) அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும், அடுத்த நிதியாண்டில் இருந்து பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
Tags:    

Similar News