செய்திகள்
குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் பிணமாக கிடக்கும் காட்சி

மகனுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை - மாமியாருடன் ஏற்பட்ட தகராறால் விபரீத முடிவு எடுத்த இளம்பெண்

Published On 2019-11-10 15:18 GMT   |   Update On 2019-11-10 15:18 GMT
மாமியாருடன் ஏற்பட்ட தகராறால் மகனுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமுராஜ்.

தொழிலாளியான இவருக்கு சூளகிரி பேரிகை அருகே உள்ள குர்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா-லட்சுமியம்மா தம்பதியரின் மகளான ராதா (23) என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பாரத் (3) என்ற மகன் உள்ளார்.

ராதாவுக்கும், அவரது மாமியார் மாதம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் ராதாவுக்கும், மாமனார் முனியப்பன், மாமியார் மாதம்மாள் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராதா தனது 3 வயது குழந்தை பரத்தை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் கொத்தூர் அருகே உள்ள ஆற்றுக்கு வந்தார். அங்கு அவர் தனது குழந்தை பரத்துடன் ஆற்றில் குதித்தார்.

2 பேரும் ஆற்றில் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஆற்றில் குதித்து 2 பேரையும் மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் ராதாவும், குழந்தை பரத்தும் நீரில் மூழ்கி மூச்சி திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனே அவர்கள் 2 பேரின் உடல்களையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கும், ராதாவின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த ராதாவின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த ராதா மற்றும் குழந்தை பரத்தின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணமாக கிடந்த ராதா மற்றும் பரத் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ராதா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு குறித்து கணவர் சாமுராஜ் ஏதும் கண்டு கொள்ளாததால் மனமுடைந்த அவர் தனது மகனுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

திருமணமாகி 4 வருடங்கள் ஆன நிலையில் ராதா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் ஓசூர் ஆர்.டி.ஓ. குமரேசனிடம் தெரிவித்தார். அவர் சம்பவம் குறித்து ராதாவின் கணவர் சாமுராஜ் மற்றும் மாமியார் மாதம்மாள், மாமனார் முனியப்பன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

குழந்தையுடன் ராதா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News