கோவையில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவை:
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 56). இவர் அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று காலை இவர் வழக்கம் போல தனது வீட்டை பூட்டி விட்டு ஒர்க்ஷாப்புக்கு சென்றார்.அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
மாலையில் வீட்டுக்கு திரும்பிய தண்டபாணி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை,பணம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.