செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்த போலி டாக்டர், நர்சு தம்பதி தலைமறைவு

Published On 2018-11-07 17:10 GMT   |   Update On 2018-11-07 17:10 GMT
காங்கயத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்த போலி டாக்டர், நர்சு தலைமறைவான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:

கரூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 58). இவர் காங்கயம் சிவன்மலை திருப்பூர் பிரிவில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். மேலும் தான் ஒரு ஓமியோபதி மருத்துவர் என்றும், தனது மனைவி நர்சு என்றும் கூறி அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

அதே இடத்தில் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தி வந்தார். தீபாவளியையொட்டி 3 வகையான சீட்டு பணம் வசூல் செய்தார். அதன்படி காங்கயம், சென்னிமலை, அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டனர். அதன்படி ரூ.15 லட்சம் வசூலானது.

தீபாவளி முன்தினம் 300 பேரும் சேர்ந்து தங்களின் பணத்தை தருமாறு கேட்டனர். நாளை தருவாக கூறி அனுப்பி வைத்தனர். தீபாவளியன்று சென்று பார்த்தபோது மெடிக்கல் ஸ்டோர், கிளீனிக், நிதி நிறுவனம் ஆகியவை பூட்டப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த முதலீட்டார்கள் குமார் மற்றும் அவரது மனைவியை தேடியபோது அவர்கள் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.

இதனையடுத்து காங்கயம், அவினாசிபாளையம், சென்னிமலை ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமார் மருத்தாளுனருக்கு படித்ததும், அவரது மனைவி படிக்கவில்லை என்றும் தெரியவந்தது. டாக்டர், நர்சு என்று பொய் கூறி சிகிச்சை அளித்ததுடன் சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News