செய்திகள்

பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

Published On 2019-04-23 06:47 GMT   |   Update On 2019-04-23 06:47 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்திவேலூர்:

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல் காவிரி ஆறு வழியாக செல்கிறது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான சரவணன், அவரது மனைவி ஜோதி மணி மற்றும் அவரது மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தரகேஷ் உள்பட 6 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மணல் அள்ளிய பள்ளத்தில் எதிர் பாராதவிதமாக அவர்கள் சிக்கி கூச்சல் இட்டனர். இதை பார்த்த அந்த பகுதியினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியாததால் 6 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த பரமத்திவேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சரவணன், ஜோதிமணி, மற்றொரு பெண்ணின் உடலையும் மீட்டனர். மேலும் 3 பேரின் உடல்களை தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News