செய்திகள்
மதுரை செல்லூர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவர் கைது
மதுரை செல்லூர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை செல்லூர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது செல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒச்சாத்தேவர்(வயது 24) என்பதும், ஒருவரை கொலை செய்வதற்காக பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற குரும்பன், பிரசாந்த், கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.