உள்ளூர் செய்திகள்
புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்படும்
புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கங்களை அறிய முடியும் என்று கலெக்டர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொண்ட பெருந்திரள் வாசிப்பு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புத்தக திருவிழா வருகிற 25ந்தேதி வரை நடைபெற உள்ளது.
புத்தகத்திருவிழாவின் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் புத்தகம் வாசிப்பதனால் ஏற்படும் பயன்கள், அறிவு சார்ந்த மற்றும் எதிர்கால தேவைக்கான கருத்துக்கள், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற பயன்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்பதனால் விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்கள், பள்ளி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் பெருந்திரள் வாசிப்பு தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நேற்று 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு நடை பெற்றது. இதில் கலெக்டர் பேசுகையில், புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களும் பட்டிமன்றங்கள், சிறப்பு தலைப்புக்களில் சொற்பொழிவுகள், சிறப்பு விருந்தினர்கள் ஆற்றும் கருத்துரைகள், இசைப் பேரூரைகள் நாட்டிய நாடகம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகள் கலந்து கொள்ளும் 50க்கும் மேற்பட்ட வகையில் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் புத்தக திருவிழாவினை குடும்பத் துடன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பதனால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் உள்ளுர் சிறப்பு உணவகங்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான இயற்கை உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.