செய்திகள்
கோப்பு படம்

தஞ்சை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மயங்கி விழுந்து பலி

Published On 2020-10-01 10:11 GMT   |   Update On 2020-10-01 10:11 GMT
தஞ்சை அருகே பெண் ஒருவர் தனது மகனுடன் மருத்துவமனையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள வளம்பக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி அன்பு (வயது40). உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அன்பு தனது மகன் கோபிநாத்துடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் இருவரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தஞ்சை -திருச்சி சாலையில் திருமலைசமுத்திரம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அன்புவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோபிநாத் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அன்பு பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதைத்தொடர்ந்து அன்புவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் கண் எதிரே மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்து பெண் இறந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News