செய்திகள்
பெருமாநல்லூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
சகோதரருக்கு செல்போனில் தகவல் கூறிவிட்டு, தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூர், லட்சுமிகார்டனை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவர், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மது அருந்தியிருந்த சிவகுமார் சேவூரிலுள்ள தனது சகோதரருக்கு போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் உடனடியாக வந்து பார்த்த போது சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.