செய்திகள்
ஆங் சான் சூகி

ஆங் சான் சூகி மீது 4 புதிய குற்றச்சாட்டுகள்

Published On 2021-07-12 17:33 GMT   |   Update On 2021-07-12 17:33 GMT
ரகசிய சட்டத்தை மீறியது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
யாங்கோன்:

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (வயது 76), அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.

இதில் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியது, ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆங் சான் சூகி மீது மண்டலே நீதிமன்றத்தில் ஊழல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை அவரது வழக்கறிஞர் இன்று தெரிவித்துள்ளார். ஏன் இந்த வழக்கை தொடுக்கிறார்கள் என தெரியவில்லை என்றும், அதை கண்டுபிடித்து, வழக்கை எதிர்கொள்ள உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ரகசிய சட்டத்தை மீறியது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 14 ஆண்டுகள் வரை  சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர் குழு நிராகரித்துள்ளது. 
Tags:    

Similar News