செய்திகள்
மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
சமீபத்தில் பல இடங்களில் 13 க்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடித்து சிகிச்சை பெற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்பட்டதால் முன்னதாக தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை மாநகராட்சி மூலமாக எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தெருநாய்களை பராமரிப்பது மிகவும் சவாலாக இருந்தது.
இதனால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட வாலிபாளையம், வெள்ளியங்காடு, அங்கேரிபாளையம் ரோடு, எம்.எஸ்.நகர், கே.வி.ஆர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்க்கள் பெருக்கம் அதிகமாகியது.
இந்த தெருநாய்கள் இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பனியன் தொழிலாளர்களை விரட்டி விரட்டு கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.
இந்தநிலையில் 54-வது வார்டு குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள வெறிநாய் அந்த பகுதியில் 3 பேரை துரத்தி துரத்தி கடித்தது. இதையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சமீபத்தில் பல இடங்களில் 13 க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்துள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், மாநகர பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீதி வீதியாக சென்று தெருக்களில் சுற்றி திரியும் நாய்க்களை வாகனங்களில் பிடித்து செல்கின்றனர். இன்று மதியம் வரை சுமார் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்க்களை பிடித்து சென்றுள்ளனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.