செய்திகள்
ஜெகதீசன்

டிஎன்பிஎல் கிரிக்கெட்- முதல் வெற்றியை பதிவு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2021-07-28 14:05 GMT   |   Update On 2021-07-28 14:05 GMT
இன்றைய ஆட்டத்தில் 52 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுசிக் காந்தி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.



மறுமுனையில் சுஜய் (10), ராதாகிருஷ்ணன் (0), ராஜகோபால் சதீஷ் (1) ஆகிய விக்கெட்டுகள் சரிந்தபோதும், நிலைத்து நின்று ஆடிய ஜெகதீசன் அரை சதம் கடந்தார். அவருக்கு துணையாக சசிதேவ் அதிரடியாக ஆடினார். ஜெகதீசன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 103.

அதன்பின்னர் உதிரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சசிதேவ் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

சேலம் பந்துவீச்சை துவம்சம் செய்த ஹரிஷ் குமார் 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. 

6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 
Tags:    

Similar News