உள்ளூர் செய்திகள்
கைதான அ.தி.மு.க. செயலாளர் வினோத் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி.

கத்தி முனையில் பெண்ணை வழிமறித்து அ.தி.மு.க. செயலாளர் பாலியல் தொல்லை

Published On 2022-01-20 09:09 GMT   |   Update On 2022-01-20 09:09 GMT
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அ.தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமம் உடையார் தெருவை சேர்ந்தவர் முருகேசன், மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சாந்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 40). இவர்களுக்கு 21 வயதில் மகன் உள்ளார். இவர்கள் இப்பகுதியில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சாந்தா அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மாற்றுத்திறனாளியான எனது கணவர் முருகேசன், கடந்த சில தினங்களாக முன்பு உடல்நிலை சரியில்லாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை அறிந்த இதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நகர செயலாளர் வினோத், எனது செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி வைத்து, பாலியல் தொல்லை அவ்வப்போது கொடுத்தார்.

நேற்று இரவு எனது கியாஸ் ஏஜென்சியை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, வினோத் எனது வாகனத்தை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இல்லை என்றால் எனது கியாஸ் ஏஜென்சியை எரித்து விடுவதாகவும் மிரட்டினார்.

உடனே நான் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வினோத், அங்கிருந்து ஓடிவிட்டார் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு, ஏமாற்றி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அ.தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News