திருப்பத்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது- 5 பயணிகள் காயம்
நெற்குப்பை:
மதுரையில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டது. சிவகங்கை பிரபாகரன் (வயது 40) மதுரை மாடசாமி (28), செந்தில்குமார் (50) உள்பட பலர் பஸ்சில் பயணம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழச்சிவல்பட்டி அருகே உள்ள சிறுகூடல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
விபத்தில் காயம் அடைந்த பிரபாகரன், மாடசாமி, பாண்டிகுமார் (45), செந்தில்குமார், ஆவாரங்காடு முத்துராம் (39) ஆகியோர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.