செய்திகள்
கோப்புபடம்

சித்தோடு அருகே கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்

Published On 2021-07-17 12:55 GMT   |   Update On 2021-07-17 12:55 GMT
சித்தோடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சித்தோடு:

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கருப்பன், மினி ஆட்டோ டிரைவர் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர் கொங்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவுக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ரோகித், யஷ்வந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரேவதியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு கருப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். இதையடுத்து ரேவதியின் பெற்றோர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரேவதி தூங்கச் சென்று விட்டார். ஆத்திரமடைந்த கருப்பன் ரேவதியை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதையடுத்து கருப்பன் தூங்கிக்கொண்டிருந்த ரேவதியின் கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக் கொண்ட ரேவதி அவரிடமிருந்து தப்பிக்க போராடி உள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த துண்டால் கருப்பன் ரேவதியின் கழுத்தை இறுக்கினார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து கருப்பன் ரேவதியின் அண்ணன் சோமசுந்தரம் என்பவருக்கு போன் செய்து உன் தங்கச்சி நடத்தை சரியில்லாததால் நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதனால் நான் அவளை கொன்று விட்டேன். இப்போது தான் எனக்கு நிம்மதி என்று கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேவதியின் அண்ணன் அவரது பெற்றோர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் ரேவதியின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அவரது கணவர் கருப்பனை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News