செய்திகள்
கோப்புப்படம்

3 முறை திருமணமான பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்

Published On 2020-09-13 02:49 GMT   |   Update On 2020-09-13 02:49 GMT
வடிவேலு சினிமா படபாணியில் பெருந்துறை அருகே 3 முறை திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவர்கள் 9 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார்கள்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (25). இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளாள். சத்யாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணமாகி கணவர்களை பிரிந்து உள்ளார். 3-வதாக சுரேசை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி மகளுடன் சத்யா திடீரென மாயமானார். அவரை சுரேஷ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் சுரேஷ் தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்கும்படி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவையும், அவரது மகளையும் தேடி வந்தனர்.

அதேசமயம் அந்த பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான குமார் (28) என்பவரின் மனைவி திலகாவும் தனது கணவரை காணவில்லை என்று பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சுரேஷ் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு வீட்டில் இருந்த சத்யாவுடன் குமார் பழகி வந்ததும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மகளுடன் மாயமான சத்யா மற்றும் குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீசார் அவர்களது விவரங்களை தொடர்ந்து கண்காணித்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாயமானவர்கள் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலை அருகே உள்ள கொள்ளேகால் பகுதியில் இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு சத்யா, 4 வயது மகள், குமார் ஆகியோரை போலீசார் மீட்டு பெருந்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், சத்யாவும், குமாரும் விருப்பத்தின் பேரிலேயே வீடுகளை விட்டு வெளியேறியதாகவும், முதலில் சென்னை சென்றுவிட்டு, பிறகு யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுவிட்டதாகவும், அங்கு திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் போலீசாரிடம் கூறினார்கள். இதைத்தொடர்ந்து சத்யாவின் தந்தையையும், கணவர் சுரேசையும், குமாரின் மனைவி திலகா மற்றும் உறவினர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் முடிவில் தங்களது தவறை உணர்ந்த கள்ளக்காதல் ஜோடி பிரிந்து விடுவதாக போலீசில் உறுதி அளித்தனர். அதன்பிறகு கள்ளக்காதல் ஜோடிக்கு போலீசார் அறிவுரை வழங்கி சத்யாவை அவரது தந்தையுடனும், குமாரை அவரது மனைவி திலகாவுடனும் அனுப்பி வைத்தனர்.

‘மருதமலை’ திரைப்படத்தில் பல திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைவது போன்ற நடிகர் வடிவேலின் நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். அதன் முடிவில் முதல் கணவர் அந்த பெண்ணை அழைத்து செல்வது போன்று அந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த சினிமா பட பாணியில் பெருந்துறை அருகே 3 முறை திருமணமான பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து 9 மாதங்களுக்கு பிறகு சிக்கி இருப்பதும், போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News