ஆன்மிகம்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியபோது எடுத்த படம்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2019-10-29 05:31 GMT   |   Update On 2019-10-29 05:31 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் தொடங்கினர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புவாய்ந்த விழாக் களில் ஒன்றான கந்தச‌‌ஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்கள் பிரதான 3 கும்பங்களுடன், சிவபெருமான், பார்வதி உள்ளிட்ட பரிவாரமூர்த்தி கும்பங்கள் என மொத்தம் 46 கும் பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

காலை 6.30 மணிக்கு, காப்பு கட்டிய ஆனந்த விசுவநாத பட்டர், கோவில் செயல் அலுவலர் அம்ரித்திடம் இருந்து தாம்பூலம் பெற்று, யாகசாலை பூஜையை தொடங்கினார். தொடர்ந்து யாகசாலையில், விக்னேசுவர பூஜை, புன்ணியாகவாசனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடைபெற்ற பின்னர், யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய் வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தச‌‌ஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங் காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



கந்தச‌‌ஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விரதத்தை தொடங்கினர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் கிரிப்பிரகாரத்தில் பெரும்பாலான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். ஏராளமான பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள், விடுதிகள், தற்காலிக கூடாரங்களில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் முருக பெருமானின் திருப்புகழை பாடியவாறும், ஓம் நமச்சிவாய மந்திர ஜெபம் எழுதியவாறும் விரதம் இருந்து வருகின்றனர்.

2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5-ம் நாளான 1-ந் தேதி வரையிலும், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மதியம் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன ச‌‌ஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 6-ம் நாளான வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News