செய்திகள்
கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர்.

பணம் கொடுக்க மறுத்த வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - 4 பேர் கைது

Published On 2021-10-15 08:56 GMT   |   Update On 2021-10-15 11:15 GMT
ஆத்திரமடைந்த 4 பேரும் சுமத் தாக்கூரை கத்தியால் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்தார்.
திருப்பூர்:

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் சுமத் தாக்கூர் ( வயது 35). கடந்த 1 மாதமாக  திருமுருகன்பூண்டியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று  சம்பளப்பணத்தை பெற்று கொண்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.  

சென்னை சென்று பீகார் செல்ல முடிவு செய்த சுமத் தாக்கூர் திருப்பூர், மங்கலம் ரோடு, ஆலாங்காடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு கிளம்பினார். மங்கலம் ரோடு நடராஜ் தியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த 4 பேர் கும்பல் தாக்கூரை திடீரென வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த  4 பேரும் சுமத்தாக்கூரை கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்தார். இதனை பார்த்ததும் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

பின்னர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து சென்ட்ரல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்  கருவம்பாளையம், ஆலாங்காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (26), முகமது ஆரிஸ், (24) ரகுராம் (20) ஒரு சிறுவர் என 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
Tags:    

Similar News