செய்திகள்
நித்யானந்தா

கோவில் லிங்கம் குறித்து வீடியோ வெளியிட்ட நித்யானந்தா மீது வழக்கு

Published On 2019-10-09 03:08 GMT   |   Update On 2019-10-09 03:08 GMT
மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமாக மூல லிங்கத்தை நித்யானந்தாவிடம் இருந்து மீட்டு தர கோரி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் இருப்பதாகவும், அந்த கோவிலை கடந்த பிறவியில் தான் கட்டியதாகவும் சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து கொளத்தூரை அடுத்த பாலவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடியில் இருந்த சிவன் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு பாலவாடி கிராமத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவிலாக உள்ளது.

எனவே இந்த கோவிலுக்கு சொந்தமான மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து அந்த மூல லிங்கத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது புகாரின் பேரில் நேற்று சாமியார் நித்யானந்தா மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News