செய்திகள்
கைது

தனியாக நடந்து சென்ற 100 பெண்களிடம் சில்மி‌ஷம்- வாலிபர் கைது

Published On 2021-10-15 10:22 GMT   |   Update On 2021-10-15 12:00 GMT
சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களை குறி வைத்து வாலிபர் ஒருவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சென்னை:

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாத நகரைச் சேர்ந்தவன் தினேஷ்குமார் 20 வயது வாலிபரான இவன் புதுடெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறார். ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக எழும்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து கொண்டே பயிற்சி பெற்று வருகிறான். இளமை பருவத்தை எட்டிய தினேஷ் குமாருக்கு பெண்கள் மீது வினோதமான ஆசை ஏற்பட்டது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பார்த்தவுடன் அவர்களின் அங்கங்களை தொட்டு பார்க்க வேண்டும் என்பதுதான் அது.

இதையடுத்து வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரையில் கண்ணில் பட்ட பெண்கள் மீதெல்லாம் தினேஷ்குமார் கை வைத்து சேட்டை செய்துள்ளான். வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் புறப்படும் தினேஷ்குமார், காலையில் தனியாக பெண்கள் சென்றால் ‘சட்’டென்று தூரத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்துவான்.

பின்னர் அந்த பெண்ணிடம் எப்படி சில்மி‌ஷம் செய்யலாம் என்று யோசிக்கும் தினேஷ்குமார், மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டிச்செல்வான். பெண்ணின் அருகில் சென்றதும் சில்மி‌ஷம் செய்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிகளில் தப்பி விடுவான்.

வில்லிவாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர் என தான் செல்லும் வழியில் எந்த பெண் தென்பட்டாலும் தினேஷ்குமார் விட்டு வைப்பது இல்லை. இதே போன்று எழும்பூர் ஓட்டலில் பணி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும் தினேஷ்குமார் ‘சைகோ’ போல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தான்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அண்ணாநகர் 2-வது மெயின் ரோட்டில் ஆவின் பூத் அருகில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது 2 மகள்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவரது இளைய மகளான 22 வயது இளம்பெண் முன்னால் தனியாக நடந்து சென்றார். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ‘சில்மி‌ஷ மன்னன்’ தினேஷ்குமார் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு பின்னால் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த தந்தை ஓடிச்சென்றார். அதற்குள் சில்மி‌ஷ ஆசாமி தினேஷ்குமார் தப்பி விட்டான். இதுபற்றி அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

உதவி கமி‌ஷனர் அகஸ்டின் பால்சுதாகர், இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்று அடையாளம் தெரியாத நிலையில் கேமரா காட்சிகளை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தினேஷ்குமார், அவரது உறவினர்களிடம் மோட்டார்சைக்கிளை வாங்கி கொண்டு வேலைக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 மோட்டார்சைக்கிள் நம்பரை வைத்து போலீசார் தினேஷ் குமாரை அடையாளம் கண்டனர். பின்னர் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த தினேஷ் குமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ரஜிஸ் பாபு தலைமையிலான தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை, ஏட்டு கிருஷ்ணமூர்த்தி, காவலர்கள் பரந்தாமன், ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

தினேஷ்குமார் மீது அண்ணாநகர் மகளிர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

தினேஷ்குமாரிடம், இது போன்ற வக்கிர எண்ணம் ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவன் தனியாக நடந்து செல்லும் பெண்களை பார்த்தவுடன் என்னை அறியாமலேயே அந்த எண்ணம் ஏற்பட்டு விடுகிறது என்றும், இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்று தவறாக நடந்துள்ளதாகவும் கடந்த ஓராண்டாக இது போன்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

Tags:    

Similar News