உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா
ராஜபாளையத்தில் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் புதுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூக்குழி திருவிழா நடைபெறும்.
2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பூக்குழி மற்றும் திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 10வது நாளான நேற்று காலை முதல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். மாலை 4- மணி அளவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது.
தென்காசி சாலை, அம்பலபுளி பஜார், ஜவகர் மைதானம், மாதா கோவில் தெரு வழியாக மாரியம்மன் கோவில் பூக்குழி திடலை வந்தடைந்தது. அங்கு ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். கரகம், தீச்சட்டி மற்றும் பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் ரவிராஜா தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.