செய்திகள்
கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து தாக்குதல்

ஒருதலை காதலால் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - வாலிபர் வெறிச்செயல்

Published On 2019-10-11 10:06 GMT   |   Update On 2019-10-11 10:06 GMT
பெரம்பலூரில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை வாலிபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்பில் படித்து வரும் மாணவி ஒருவரை கட்டிட வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர்(வயது25) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுதாகர் அந்த மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையறிந்த மாணவியின் உறவினர்கள் சுதாகரை பலமுறை கண்டித்துள்ளனர். எனினும் சுதாகர் திருந்தவில்லை. கடந்த 3-ந்தேதி பாடலூர் காவல்நிலையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்ணின் உறவினர்கள் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தனர்.

ஆனால் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி சம்பவத்தன்று மதியம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த சுதாகர், அவரது நண்பர் ஆகியோர் மாணவியின் கழுத்து, கை ஆகிய இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.

காயமடைந்த மகாலட்சுமியை அவரது உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனிடையே ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சித்த சுதாகர் மீது பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News