செய்திகள்
நத்தம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல் (வயது 37). இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு அவர் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வந்தார். அவர் சிகிச்சை கொடுக்கும் முறையை பார்த்த அப்பகுதி மக்களுக்கு இவர், உண்மையிலேயே மருத்துவம் படித்துள்ளாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட தனிப்பிரிவு மருத்துவ அதிகாரிகளிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவ அதிகாரிகள் வேலம்பட்டிக்கு வந்து பிரகாஷ் மண்டலின் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பிரகாஷ் மண்டலிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழை காட்டும்படி கேட்டுள்ளனர்.
அப்போது தான் அவர் மருத்துவம் படிக்கவில்லை என்பதும், 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நத்தம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது மருத்துவ அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டரான பிரகாஷ் மண்டலை கைது செய்தனர்.