செய்திகள்
விராட் கோலி, ரிஷப் பந்த்

டோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்

Published On 2019-12-05 12:42 GMT   |   Update On 2019-12-06 04:46 GMT
ரிஷப் பந்த் வாய்ப்பை மிஸ் செய்யும்போது டோனி... டோனி... எனக் கத்தக்கூடாது என ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த எம்எஸ் டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பராக்க அணி நிர்வாகம் விரும்புகிறது.

ஆனால் ரிஷப் பந்த் நெருக்கடியால் சரியாக ரன்கள் குவிக்கவில்லை. அதேபோல் விக்கெட் கீப்பர் பணியிலும் வாய்ப்புகளை தவற விடுகிறார். வங்காளதேச அணிக்கெதிரான தொடரில் ஸ்டம்பிங்கை தவறவிட்டபோது ரசிகர்கள் டோனி... டோனி... டோனி... என கூச்சலிட்டனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது ரிஷப் பந்துக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம்.

இந்நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதுகிறது. அப்போது இதுபோன்று சத்தமிடக்கூடாது என்று விராட் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பந்தின் திறமையை மீது நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் சில வாய்ப்புகளை தவறவிட்டால், ரசிகர்கள் எம்எஸ் டோனி என்று மைதானத்தில் கூச்சலிடக்கூடாது. இது மரியாதைக்குரியது அல்ல. ஏனென்றால், எந்தவொரு வீரரும் இதுபோன்று நடப்பதை விரும்பமாட்டார்கள்.

வீரர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்காக விளையாடி வருகிறார்கள். அதனால் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட, அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த நிலையை யாரும் விரும்பமாட்டார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News