செய்திகள்
உடையார்பாளையம் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
உடையார்பாளையம் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடையார்பாளையம் :
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த கழுமங்கலம் கீழதெருவில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை உள்ளது. இந்த சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை மண்சாலைபோல் காணப்படுகிறது. தற்போது ஒரு சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
சமீபகாலமாக மழை பெய்து வருவதால் இந்த சாலையில் வாகனம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகனஓட்டிகள் சேற்றில் சிக்குவதோடு, தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
மேலும் சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாலை சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில் அடிக்கடி கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கும் சம்பவம் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.