ஆன்மிகம்
சப்த கன்னியர்

கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள சப்த மங்கை தலங்கள்

Published On 2020-08-06 02:22 GMT   |   Update On 2020-08-06 02:22 GMT
‘சப்த மாதர்கள்’ தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.
பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு பேரும், ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எழுவரும் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரையில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய 7 பருவங் களைக் கடந்து வருகிறாள். இந்தப் பருவங்களுக்கு இடையில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏராளம். பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, இந்த ‘சப்த மங்கை தலங்கள்’ அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..

சக்கரமங்கை

சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது ‘சக்கரமங்கை’. இதனை ‘சக்கரப்பள்ளி’ என்றும் அழைப்பார்கள். பேச்சு வழக்கில் தற்போது இந்த ஊர் ‘ஐயம்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறது. சப்த மாதர்களில் பிராம்ஹி வழிபட்ட தலம் இது. மூலவராக சக்கரவாகேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகையின் பெயர், தேவநாயகி. பார்வதிதேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இது. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் ஐயம்பேட்டை உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதிதான் சக்கரப்பள்ளி ஆகும்.

அரியமங்கை

சப்த மாதர்களில் மகேஸ்வரி வழிபட்ட இந்தத் தலம், சப்த மங்கை தலங்களின் வரிசையில் இரண்டாவது ஆகும். இங்குள்ள இறைவன் ‘அரிமுக்தீஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘ஞானாம்பிகை’ என்றும் பெயர் பெற்றுள்ளனர். ‘அரி’ என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணு வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு இந்தப் பெயர் வந்தது. இந்த ஆலயத்தில் பார்வதிதேவிக்கு, தன் ஜடாமுடியில் உள்ள கங்கையின் தரிசனத்தை சிவபெருமான் காட்டியருளினார். தலவிருட்சமாக நெல்லி மரம் உள்ளது. தஞ்சாவூர் -கும்பகோணம் சாலையில் சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலடி என்ற இடத்தில் இறங்கி இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.

சூலமங்கை

கவுமாரி எனப்படும் சூலமங்கை வழிபட்ட தலம் இது. சப்த மங்கை தலங்களில் மூன்றாவது ஆலயம். தற்போது இந்த ஊர் ‘சூலமங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பெயர், கிருத்திவாகேஸ்வரர். அம்பாளின் பெயர், அலங்காரவல்லி. பார்வதிக்கு, சிவபெருமானின் சூல தரிசனம் கிடைத்த தலம் இதுவாகும். அம்பாள் இங்கு, மங்கை வடிவில் காட்சியளிக்கிறாள். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இந்த ஆலயத்தில் சனி பகவான், தன் குருவான பைரவருடன் அருகில் நின்றபடி தரிசனம் தருகிறார். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், ஐயம்பேட்டைக்கு மிக அருகாமையிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

நந்திமங்கை


சப்த மாதர்களில் ஒருவரான வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. சப்த மங்கை தலங்களில் 4-வதான இந்த ஆலயம் நல்லிச்சேரி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. நந்திதேவரால் சிவபெருமான் பூஜிக்கப்பட்ட தலமாகவும் இது இருக்கிறது. திருவையாறில் பஞ்சாட்சர உபதேசம் பெற்ற நந்தி, இத்தலத்தில் சித்திஅடைந்ததாக சொல்லப்படுகிறது. இறைவன்- ஜம்புநாத சுவாமி, இறைவி- அகிலோண்டேஸ்வரி. பார்வதி தேவி, இங்கு சிவபெருமானின் திருக்கழல் தரிசனத்தைப் பெற்றாள். நாவல் மரம் தல விருட்சமாக உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலை வில் நல்லிச்சேரி திருத்தலம் இருக்கிறது.

பசுமங்கை

பசுபதிகோவில் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம், சப்த மங்கை தலங்களில் 5-வது ஆகும். சப்த மாதர்களில் வராகி வழிபட்ட ஆலயம் இது. காமதேனு என்னும் பசு, இறைவனை நினைத்து வழிபட்டதால், இந்த ஊருக்கு ‘பசுபதிகோவில்’ என்ற பெயர் நிலைத்தது. இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர் என்றானது. அம்பாளின் பெயர், பால்வள நாயகி என்பதாகும். இந்த ஆலயம் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டது. பார்வதிதேவிக்கு, தன்னுடைய உடுக்கை தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. ஆலய தல விருட்சம், வில்வம். தஞ்சாவூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பசுபதிகோவில் அமைந்துள்ளது.

தாழமங்கை

சப்த மாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம், தாழமங்கை. சப்த மங்கை தலங்களில் இது 6-வது திருத்தலமாகும். இறைவன்- சந்திரமவுலீஸ்வரர் என்றும், இறைவி - ராஜராஜேஸ்வரி என்றும் பெயர் பெற்றுள்ளனர். அகத்திய முனிவர், தாம் இயற்றிய அபூர்வமான நாமாவளிகளை இங்கு வைத்து பாடியதாக சொல்லப்படுகிறது. பார்வதிதேவிக்கு, பிறை சந்திர தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. இங்கு தாழை மரம் தலவிருட்சமாக உள்ளது. தாழமங்கை, தாயமங்கலம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் அழிந்துவிட்டதாகவும், தஞ்சாவூர்- கும்பகோணம் சாலை யில் ஆலயம் மட்டும் எஞ்சியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திருப்புள்ளமங்கை

சப்த மங்கை தலங்களில் 7-வது தலம். சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம். இத் தல இறைவன், ‘பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், சவுந்திரநாயகி என்பதாகும். பார்வதிதேவி, சிவபெருமானின் நாக தரிசனத்தை பெற்ற தலம் இது. ஆல் மரம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது. இந்த ஆலயமும் பசுபதிகோவில் பகுதியிலேயே அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News