உள்ளூர் செய்திகள்
குமரன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தீர்த்தவாரி
செம்பனார்கோவில் குமரன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் தீர்த்தவாரி நடந்தது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மயில் வாகனத்தில் சண்முக சுப்பிரமணிய சாமி வீதியுலா நடந்தது.கடந்த 16ம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தங்க கவசம் மற்றும் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக சிறப்பு யாகம், சண்முகா அர்ச்சனை நடந்தது. விழாவையொட்டி சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சாமி, அம்பாள் புறப்பாடாகி, வள்ளி தெய்வானையுடன் சண்முக சுப்பிரமணியசாமி, இடும்பர் ஆகிய சாமிகளின் வீதியுலா நடந்தது.
பின்னர் காவிரி ஆற்றங்கரையில் பஞ்ச மூர்த்திகளையும் எழுந்தருளச்
செய்து தீர்த்தவாரி நடந்தது. அப்போது புனித நீராடினர்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை குமரன் கோவில் பகுதி குடியிருப்போர் பொது நலச்சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணதாசன், பொருளாளர்
குணசேகரன் ஆகியோர் செய்தனர்.