செய்திகள்
கோப்புப்படம்

கீழடி அகழ்வாராய்ச்சி குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி

Published On 2021-09-26 02:59 GMT   |   Update On 2021-09-26 02:59 GMT
உலக சுற்றுலா தினத்தையொட்டி கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டிய குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் மண்பாண்ட ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவை ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அதே போல் கொந்தகை, அகரம், மணலூரிலும் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கீழடியில் வாரந்தோறும் 6 நாட்களும் குழி தோண்டி அதில் பழங்கால பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதனால் கீழடியில் வாரநாட்களில் பொதுமக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. பொதுமக்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்கள் கீழடிக்கு சென்று அகழாய்வு பணிகளை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கீழடி, கொந்தகை, ஆகிய 2 இடங்களில் அகழாய்வு குழிகளை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் பொதுமக்கள் கீழடியில் அகழாய்வு பணிகளை நேரில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News