செய்திகள்
கொரோனா பலி

உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் பேர் கொரோனாவால் மரணம்

Published On 2021-11-02 02:54 GMT   |   Update On 2021-11-02 02:54 GMT
உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். வேதனையான வேடிக்கையாக, ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளை இத்தொற்று அதிகம் பாதித்துள்ளது.
வாஷிங்டன் :

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 50 லட்சத்து 17 ஆயிரத்து 413-ஐ எட்டியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.75 கோடியை கடந்திருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகையே உலுக்கியுள்ள கொரோனாவால், பாகுபாடின்றி அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும், ஏழை நாடுகளுடன் ஒப்பிடும்போது பணக்கார நாடுகளில் பாதிக்கப்பட்டோரும், இறப்பு எண்ணிக்கையும் அதிகம் என்பது வேதனையான வேடிக்கை.

உயர் மற்றும் உயர் நடுத்தர வருவாய் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து, பிரேசில் ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 8-ல் ஒரு பங்குதான். ஆனால் உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களில் பாதி பேர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிலும் உயிரிழப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ள அமெரிக்காவில் மட்டும் 7 லட்சத்து 66 ஆயிரத்து 299 பேர் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

பணக்கார நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்ததற்கு, அங்கு மக்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் முதியவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது ஒரு காரணம். மாறாக, வளரும் மற்றும் ஏழை நாடுகளில் குழந்தைகள், இளையோரின் எண்ணிக்கையே அதிகம் என்பதால் அவர்கள் கொரோனாவின் தாக்குதலில் இருந்து பெருமளவில் தப்பிவிட்டனர்.

இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், உலகில் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ நகரங்களின் ஜனத்தொகைக்கு இணையானது என்று தெரிவித்துள்ளது. இதய நோய்கள், பக்கவாதத்துக்கு பிறகு, உலகில் உயிர்களைப் பறித்ததில் 3-வது இடத்தை கொரோனா பிடித்துள்ளது.

உலகத்தையே மிரட்டியே கொரோனா வைரஸ், தற்போது ரஷியா, உக்ரைன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டுள்ளது. அங்கு குறைவான பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதும் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆனால் உலகிலேயே குறைவாக தடுப்பூசி போட்ட கண்டமாக ஆப்பிரிக்கா உள்ளது. அக்கண்டத்தின் 130 கோடி பேரில் இதுவரை வெறும் 5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News