செய்திகள்
காஞ்சீபுரம், புத்தேரி தெருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலமிடும் பெண்.

காஞ்சீபுரத்தில் திமுக எம்எல்ஏ, நிர்வாகிகள் வீட்டு முன்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம்

Published On 2019-12-30 07:33 GMT   |   Update On 2019-12-30 07:33 GMT
காஞ்சீபுரத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் வீட்டு முன்பு கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம்:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை பெசன்ட் நகரில் நேற்று காலை குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி வீட்டு முன்பும் கோலம் வரையப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வினரும் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் வீட்டு முன்பு “சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.” வேண்டாம் என்று பெரிய அளவில் கோலம் போடப்பட்டு இருந்தது.

இதே போல் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டு இருந்தனர். சாலவாக்கத்தில் உள்ள மாவட்ட செயலாளர் க.சுந்தர் வீட்டு முன்பும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News