செய்திகள்
பஸ் போக்குவரத்து - கோப்புப்படம்

166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது

Published On 2020-09-06 18:37 GMT   |   Update On 2020-09-07 01:27 GMT
தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் ஆகிய 2 மண்டலங்களையும் தவிர்த்து பிற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. எனினும் பஸ்கள் அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

பின்னர், ஜூன் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சென்னை மண்டலம் தவிர்த்து ஏனைய மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு, கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.


இந்நிலையில் தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது

ஏற்கனவே மாவட்டங்களுக்குள் அரசு பேருந்து சேவை தொடங்கிய நிலையில் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்து, தனியார் பேருந்து சேவை தொடங்கியது.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 400 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என நீண்டதூர இடங்களுக்கு 1,100 பஸ்களை இயக்கி வருகிறது.

மேலும் விழுப்புரம், கும்பக்கோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. இதில் சென்னையில் இருந்து மட்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 260 பஸ்கள் உள்பட பிற அரசு போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து 800 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கோயம்பேடு பணிமனையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், என்ஜின்கள், பேட்டரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பஸ்களின் இருக்கைகளும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசு பஸ்களில் முன்பதிவு விவரம் குறித்து அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். அதில், இன்று மட்டும் பயணம் செய்ய 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும். ஆனால், பயணிகள் வந்தால் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பெரும்பாலும், கோயம்பேட்டில் இருந்து தலா 24 பயணிகளுடன் பஸ்கள் புறப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்சில் இருக்கைகள் இருந்தால் நடுவழியில் பயணிகளை ஏற்றிக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News