மேற்கு வங்காளத்தில் வன்முறை: அமித்ஷா நியமித்த 3 பேர் குழு ஆய்வு
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் 24 பர்கானாக்கள் மாவட்டம் பட்பாரா பகுதியில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் வெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வன்முறை சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா உத்தரவிட்டார். இதற்காக மேற்கு வங்காள மாநில பா.ஜனதா எம்.பி. அலுவாலியா, சத்யபால் சிங் எம்.பி., பி.டிராம் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
இக்குழுவினர் இன்று பட்பாரா பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுதான் வன்முறைகளை கட்டவீழ்த்து விட்டுள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.