ஆன்மிகம்
பெருமாள் பூஜை

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை.. விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

Published On 2021-09-18 01:36 GMT   |   Update On 2021-09-18 07:55 GMT
ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதத்துக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 2, அக்டோபர் 9, அக்டோபர் 16 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமை வருகிறது. இந்த 5 சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபட தவறாதீர்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.

புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் வரவே வராது. சனிக்கிழமையன்று விரதம் இருந்து பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து பெருமாளை வழிபடவேண்டும்.

மாவிளக்கு என்பது திருப்பதியில் உள்ள ஏழுமலைகளை குறிக்கும். அந்த மாவிளக்கில் ஏற்றப்படும் தீபம் ஏழுமலையானை குறிக்கும். எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழுமலையானே நம் வீட்டுக்கு வந்ததாக ஐதீகம் ஆகும்.

மாவிளக்கு ஏற்றுவதோடு, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. இதன்மூலம் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் புட்டாசி சனிக்கிழமையன்று வழிபாடுகள் செய்து அன்னதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடி வரும்.

விருப்பம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மிகப்பெரிய படையல் போட்டு வழிபடலாம். பூஜை அறையில் குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.

Tags:    

Similar News