மயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 7 பவுன்- 2 கிலோ வெள்ளி கொள்ளை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் மேலவீதியை சேர்ந்தவர் கோபால அய்யர் (வயது 80). இவர் வேளாண்மை துறை அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபால அய்யர், தனது மனைவி ருக்மணியுடன் சென்னையில் உள்ள மகனை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகிறார்.
பூட்டி கிடந்த வீட்டில் நகை- வெள்ளி கொள்ளை போன சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.