ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா

Published On 2019-07-12 03:25 GMT   |   Update On 2019-07-12 03:25 GMT
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்து வருகிறது.

6-ந் திருவிழாவான நேற்று காலை 11 மணிக்கு சுவாமி-அம்பாள் ஆறுமுகநயினார் சன்னதிக்கு மண்டகப்படி அழைப்புக்காக எழுந்தருளினர். அங்கு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சோடச தீபாராதனை நடந்தது. இரவில் வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பரதநாட்டிய நிகழ்ச்சியும், ராஜேஷ்வைத்யா குழுவினரின் வீணை இசை கச்சேரியும் நடந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சுவாமி-அம்பாள் பல்லக்கிலும் தவழ்ந்த திருகோலத்திலும், இரவில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளிகாமதேனு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. இரவு 8 மணிக்கு வீரமணிராஜூயின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜர் வெள்ளைசாத்தியும், காலை 8 மணிக்கு பச்சை சாத்தியும், மாலை 4 மணிக்கு கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவில் தேர் கடாட்ச வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. மறுநாள் தீர்த்தவாரி நடக்கிறது.
Tags:    

Similar News